Total Pageviews

Monday, 10 June 2013

சீமைக் கருவேலம்

சீமைக் கருவேலம் (Prosopis juliflora) அல்லது வேலிக்காத்தான் எனப்பரவலாக அறியப்பட்ட இது வேளாண் நிலங்களை மற்றும் வாழ்வாதரங்களை நாசப்படுத்தும் மிகக்கொடியத் தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் ப்ரோசோபிச் சூலிஃப்லோரா Prosopis juliflora வாகும். இதை எசுப்பானிய மொழியில் bayahonda blanca என அறியப்படுகிறது. மெக்சிகோ,கரிபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்காவைத் தாயகமாக கொண்ட இவை ஆசியஆசுதிரேலியக் கண்டங்களில் மிகப்பெரும் நச்சுக்களையாக உருவெடுத்துள்ளது.

1.பயிர்களுக்கு வேலியாகவும் சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950களில்ஆசுத்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இது இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த அறுபது ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது. இந்த முள்மரம், அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டு வேளாண் கண்காட்சியில் மட்டும் வைக்கப்பட்டுவருகிறது.

2.மரம் 12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இது புளியமர இலைகளைப் போல் சிறு இலைகளையும், கருவேலமரத்தை ஒத்தும் காணப்படுகின்றன. இவைகள் மஞ்சள் நிற நீண்ட பூக்களையும், பச்சை நிறக்காய்களையும் முதிர்ச்சியில் மஞ்சளாக மாறிவிடும். இதன் வேர் நிலத்தில் ஆழச்சென்று நிலத்தடி நீரையும் உறிஞ்சக்கூடியது. இதன் வேர் (53 மீட்டர்) 175 அடி நீலம் வளரக்கூடியதென பதிவிடப்பட்டுள்ளது. இதன் தண்டுப்பகுதிகளில் திரவ ஒழுக்கு காணப்படும்.

3.எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இவை ஆழ வேர் மட்டுமில்லாமல் உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் செல்வதை தடைசெய்கிறது. எந்த நோயினாலும் பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு தான் மட்டும் செழித்துப் படருகின்ற தன்மை வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு. இவை வாழும் இடத்தில் உற்பத்தி செய்யும் நச்சுப்பொருளால் நிலத்தில் பிற செடிகள் வளர்வதை அறவே தடுக்கிறது.

4.
  • விவசாயம் மற்றும் ஏனைய செடிகள் தழைக்கா வண்ணம் நிலத்தை வீணடிக்கிறது.
  • அடர்ந்து வளர்ந்து பெரும் பகுதியே ஆக்கிரமிப்பு செய்துவிடக்கூடியது
  • நஞ்சு மிகுந்த முட்கள் விலங்குகளுக்கும் மாந்தர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துபவை.
  • புல்களை அடியோடு வளரவிடாமல் கால்நடைகளுக்கு பாதிப்பேற்படுத்துகிறது.
  • நிலத்தடி நீரைக்குறைப்பதால் சில அரிய மூலிகைகளின் இழப்பு
  • இவைகளின் வீரியத்தால் பிறத்தாவரங்களுடன் கலந்து உட்கொள்ளும் கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் வயிறு கோளாறுகள் அடைகின்றன
இதைப்போல் இதன் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கின்றன. இறுதியில் விளைநிலங்கள் பாலைவனங்கள் ஆகின்றன.

கேரளாவில் இவை வேறோடு பிடுங்கியெறியப்பட்டு இவை வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில், இவை விளை நிலங்களில் 25 விழுக்காட்டிற்கு மேல் வளர்ந்து வேளாண்மையே தொடரா வண்ணம் நிலத்தைப் பாழ்படுத்தியிருக்கிறது. இதனை களைய பல அரசு மற்றும் தன்னார்வள தொண்டு நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.

மாவட்டத்தில் மக்கள் தொகையை விட அதிகமாக காணப்படும் 
கருவேல மரங்களை அகற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகிவிட்டது. "அரசு நிலம், 
தனியார் பட்டா நிலத்தில் விளைந்துள்ளது,' என, உரிமை கொண்டாட, இவை ஒன்றும் 
பாதுகாக்கப்பட வேண்டிய வஸ்து இல்லை. பாரபட்சமில்லாமல் அழிக்கப்பட வேண்டிய 
விஷ ஜந்தாகும். வெட்டினால் தழைக்கும் தன்மை கொண்ட இவற்றை, வேருடன் அழிக்க 
வேண்டும். இதற்காக அரசு தரப்பில் சிறப்பு நிதி ஒதுக்கி, இயந்திரங்கள் மூலம்
துரிதமாக பணி நடக்க வேண்டும். எதிர்ப்புகளுக்கு இதில் இடம் கொடுக்க 
கூடாது. மாவட்டத்தில் தற்போதுள்ள கருவேல மரங்களில் 50 சதவீதத்தை ஒழித்தால் 
கூட, வறட்சியின் பிடியில் மாவட்ட மீள்வதை ஓரிரு ஆண்டில் நாம் உணரலாம். 
முழுமையாக ஒழித்து கட்டினால், கடலோர மாவட்டத்தின் பயனான, மழைபொழிவை நாம் 
ஆண்டுதோறும் அனுபவிக்கலாம். தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள், 
தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள், தனியார் கிளப்புகள் போன்றவையும் இந்த 
விசயத்தில் முழுஈடுபட்டுடன் செயல்பட வேண்டும். அப்போது தான், வறண்டு வரும் 
ராமநாதபுரத்தின் நிலையை மாற்ற முடியும்.

 posted by
GVR..,

No comments:

Post a Comment